Monday 23 January 2012

ஜீவாமிர்தம் பயன்,நன்மைகள்


ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?அதன்  நன்மைகள் என்ன?

தெளிப்புக்காக எடுக்கும்போது  கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும்  குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை  குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும்  தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்


4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )


15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
30 -
ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
60 -
ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
90 -
ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.


6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )


30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
60 -
ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
90 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
120-
ம் நாளில்  5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
150 -
ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்   ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.

ஓர் ஆண்டு  பயிர்களுக்கு

30 -
ம்   நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
60 -
ம்   நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
90 -
ம்   நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
120-
ம்  நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
150 -
ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
180 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
210 -
ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200  லிட்டர் தண்ணீர்.
240 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
270 -
ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்   ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .
பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு  2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200  லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.



ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?

ஜிவாமிர்தம் பாய்சசப்படும்  பயிர்களை எந்த நோயும் தாக்காது.
ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .
ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.
ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?


தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிப்பு முறை
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
இவற்றைத் தொட்டியில்  விட்டு  கலக்க  வேண்டும்  தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல்  கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம்  கோடிக்கும்  அதிகமான்  நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும்  இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.
இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
பயன்படுத்தும் முறை
ஜிவாமிர்தம்  எல்லா  வகை  பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்


பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.
வெங்கட்ராமன் பண்ணையம்
பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்
நெல்
  • ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 செண்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவவும்
  • 2 லி பஞ்சகவ்யத்துடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15ஆம் நாள் தெளிக்கவும்
  • விதைத்ததில் இருந்து 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவும்
  • நடவில் இருந்து 30ஆம் நாள் – நாலரை லிட்டர் பஞ்ச கவ்யத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
  • கழிவுநீர் குட்டை வழி பாசனம் செய்தால் வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களும் தேவையில்லை. வாரம் ஒரு முறை பாய்ச்சவும்
  • சாதாரண நடவு முறையில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி
  • மதிப்புக் கூட்டி அரிசியாக விற்பனை. தவிடு கால்நடைத் தீவனமாகிறது
பசு மற்றும் எருமை
  • ஆடு மாடுகளுக்கு தினமும் 5 மணிநேர மேய்ச்சல்
  • மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல் மற்றும் தீவனப்புல்
  • 30 சதம் அரிசித் தவிடு – 20 சதம் புண்ணாக்கு – 30 சதம் சோள குருணை – 10 சதம் பாசிப்பருப்பு உமி – 10 சதம் உளுந்து உமி அகியவற்றை ஒன்றாகக் கலந்து லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் அடர் தீவனம் தயாரிக்கவேண்டும்
  • ஒரு மாட்டுக்கு காலை ஒண்ணே கால் கிலோ – மாலை ஒண்ணே கால் கிலோ
  • ஆடுகளுக்கு தனியே தீவனம் தேவையில்லை.
  • கோழிகளுக்கும் தேவையில்லை. குப்பை கூளங்கள் மற்றும் சிதறிய தீவனங்களும் இவைகளுக்குப் போதும்
  • பால் விற்பனையுடன் சாணத்தையும் சாணம் மற்றும் கழிவு நீர் கலந்து பஞ்ச கவ்யத்தையும் விற்றுவிடுகிறார். நெல்லுக்குக் கூட தொழுஉரம் போடுவதில்லை என்கிறார்.
  • சாணத்தின் ஒரு பகுதி இவருடைய பஞ்சகவ்ய தேவைக்கும் மீன் குட்டைக்கும் போய்விடுகிறது
  • மீன் குட்டைக்கும் வயலுக்கும் நீர் கழிவு நீர் குட்டையிலிருந்தே போகிறது.
  • கோழி குஞ்சுகள் மற்றும் கோழி விற்பனை, மீன் குளத்தின் மீன் விற்பனை என்று இவரது வருடாந்திர கல்லா லாபம் – என்னுடைய சம்பளத்தை விட அதிகம் :)
  • இயற்கை வழி வேளாண்மை என்பதால் நிறைய மண்புழுக்கள் தோன்றுகின்றன. வேர் பகுதி பூச்சிகளைத் தின்று அழிக்கின்றன.
  • கொக்குகள் வழி பயிரின் நடுப்பகுதி மேல்பகுதி பூச்சிகள் சம்ஹாரமடைகின்றன. அத்துடன் மாடுகளிடம் உள்ள ஒட்டுண்ணிகளைக் காலி செய்து விடுகின்றன.
  • பேன்கள், உன்னிகள், ஈக்கள் இல்லாமல் இருந்தாலே கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்
விவசாயம் என்பது அனைவருக்கும் பார்முலா மாதிரி அமைவதில்லை. என்றாலும் இவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் சமயோஜிதம் அவருக்கு பயன்தந்திருக்கிறது.

Sunday 22 January 2012

பயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள்



இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.
விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.
எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.

அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
வெள்ளை , இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
மிளகாய்ப் பேன், வெள்ளை யைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.
பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

லாபம் தரும் சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்-புதிய தொழில் வாய்ப்பு



கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும்.
கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது.
தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.
சாமை
ஒரு எக்டரில் சுமார் 1030 கிலோ என்ற அளவுக்கு மகசூலை சாமை பயிரில் பெறலாம். இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.
வரகு
வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த காலத்தில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறினர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர். இதன் விதைகள் நீண்ட கால சேமிப்பிற்கு பிறகும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழையைக் கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.
உடல் புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் ஆற்றலும் வரகுக்கு உண்டு.
பனிவரகு
இந்த பயிர் மிககுறுகிய வயதுடையது. மானவாரி பருவத்தில் விவசாயிகள் லாபம் பெறுவதற்கான ஒரு பயிர் என்றால் அது பனிவரகு என்று சொல்லலாம். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் அறிமுகமானது. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். உமி நீக்கப்பட்ட பனிவரகு தானியமானது, அதிக புரதச்சத்தை கொண்டது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் மானாவாரியாக எல்லா வகை மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது.
சரியான பருவத்தில் விதைக்கும் போது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்த பயிரை தாக்குவதில்லை. பனிவரகில் இருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, புட்டு, முருக்கு, பக்கோடா, சேலட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.
சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
குதிரைவாலி
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. வளமற்ற நிலங்கள் கொண்ட வறுமையான விவசாயிகளும் இதனை பயிரிடலாம். இந்த பயிர் மாட்டுத்தீவனமாகவும், மக்காச்சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.

இந்த தானியங்களை பயன்படுத்தி புதிய புதிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு



 உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.
மண்புழுக்கள் அதிக அளவில் பெருகினால் மட்டுமே அதிக அளவு தரமான மண்புழு உரம் கிடைக்கும்.  இதனை பெற, குவியலில் விடப்படும் மண்புழுக்கள் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்வது முக்கியம். மண்புழுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம், உணவு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை இருக்க வேண்டும். மண்புழுக்கள் வசிப்பதற்கான இடத்தில் நிலவும்  ஈரப்பதம் எப்போதும் சரியான அளவில் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைந்து போனால் புழுக்கள் பாதிக்கப்படும். இதே போல் ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் மூச்சு விட முடியாமல் திணறி இறந்து போகும். இதற்கு காரணம், மண்புழுக்கள் அவற்றின் தோல் மூலம் தான் சுவாசிக்கின்றன. ஈரப்பதம் அதிகமாகும் போது இந்த தோலின் வழியாக சுவாசிக்க முடியாமல் அவை மடிகின்றன.
இதே போல் மண்புழுக்களுக்கு உணவாக காய்கறி மற்றும் இயற்கை கழிவுகளை மாட்டுச்சாணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். மண்புழுக்கள் இதை உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளில் தான் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. மண்புழு வாழ்வதற்கான வெப்பநிலை என்பது 16 முதல் 28 டிகிரி சென்டிகிரேட் ஆகும். வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் நிழலில் புழுக்களை வளர்த்து நீர் தெளித்து குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு
மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு ஏழை விவசாயிகளுக்கான சிறந்த முறையாக சில்பாலின் முறை உதவுகிறது. சில்பாலின் பை என்பது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வகை செயற்கை பொருளால் ஆன பை ஆகும். சிறிய அளவில் மண்புழு உரத்தயாரிப்பில் இறங்க விரும்பும் விவசாயிகள் 12 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் இரண்டரை அடி உயரம் இருக்கும்படியான சில்பாலின் பையை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பையை பொருத்துவதற்கு 13 அடி நீளமுள்ள நான்கு சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதே போல் 4 அடி உயரமுள்ள 14 சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சில்பாலின் பையில் நீர் வெளியேறுவதற்காக துளைகள் உள்ள பகுதி தாழ்வாக இருக்கும்படி சற்று தொய்வாக நிலை நிறுத்த வேண்டும். சவுக்கு மரத்தை சில்பாலின் பையுடன் சேர்த்துக் கட்ட கட்டுக்கம்பியையோ, பிளாஸ்டிகள் கயிற்றையோ பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர்வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியின் வெளியில் 2க்கு2க்கு2 என்ற அளவில் குழி அமைத்து மண்புழு வடிநீரை பெறலாம். சில்பாலின் பையின் கீழ்பகுதியில் ஜல்லிக்கற்களையோ அல்லது தென்னை நார்க்கழிவையோ அல்லது இளநீர் மட்டைகளையோ இட்டு ஒரு படிவம் போன்ற பகுதியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த படிவ பகுதியின் ஆழமானது 10 முதல் 15 செ.மீட்டர் அளவில் இருந்தால் போதுமானது. இந்த படிவத்தின் மீது மாட்டுச்சாணத்தையும், மற்றக்கழிவுகளையும் கலந்து பாதிமக்கிய கலவையை இடவேண்டும். விவசாயக் கழிவுகளை நன்கு வெட்டி எடுத்து மாட்டுச்சாணத்துடன் கலந்து, 20 முதல் 25 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால் பாதி மக்கிய கழிவு கிடைக்கும். பின்னர் இதன் மீது நீர் தெளித்து அதன் மேல் மண்புழுக்களை இடவேண்டும். மேல் சொன்ன அளவில் அமைக்கப்பட்ட சில்பான் பாய் அமைப்பில் ஒன்றரை டன் அளவுக்கு கழிவுகளை கொட்டி வைக்க முடியும். இந்த அளவு கழிவை மண்புழு உரமாக மாற்ற சுமார் 3 கிலோ என்ற அளவில் மண்புழுக்களை இட வேண்டும்.
செரிமானமாகும் கழிவுகள்
இவ்வாறு கழிவுகளில் விடப்பட்ட மண்புழுக்கள் அந்த இயற்கை கழிவுகளை உண்டு செரித்து எச்சத்தை வெளியேற்றும். இந்த நிலையில் கழிவின் ஈரப்பதமானது மண்புழுக்கள் வாழ ஏற்றதாக இருக்கிறதா என்பதை கவனித்து வர வேண்டும். ஈரப்பதத்தை தக்க வைக்க கழிவுக்குவியலின் மேல், அதாவது சில்பாலின் பாயின் மேல் புறத்தில் வைக்கோல் அல்லது சணல் சாக்குகளை கொண்டு மூடி வைக்கலாம். இவ்வாறு பராமரித்து வரும் போது 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும். மண்புழு வெளியிடும் எச்சத்தைக் கொண்டே மண்புழு உரம் தயாராகி விட்டதை அறிந்து கொள்ள முடியும். மண்புழு உரம் தயாரானதும், பச்சை சாணத்தை கால் பந்து போல் உருண்டை வடிவில் உருட்டி சில்பாலின் பாயில் ஆறு இடங்களில் லேசாக இரண்டு முதல் மூன்று செ.மீட்டர் ஆழத்தில் வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து, அந்த மாட்டுச்சாண உருண்டையை எடுத்து மண்புழுக்களை பிரித்துக் கொள்ளலாம். அதாவது, சில்பாலின் பையில் போடப்பட்ட கழிவுகளை எல்லாம் ஏற்கனவே உண்டு செரித்து விட்ட மண்புழுக்கள் சாண உருண்டையை உண்டு செரிக்க ஏதுவாக அதில் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது மண்புழுக்களை சேகரித்து விட முடியும்.
புழுக்கள் பராமரிப்பு
இவ்வாறு மண்புழுக்களை சில்பாலின் பாயில் கழிவுக்குவியலில் இருந்து எடுத்த பின் சில்பாயின் பாயில் குவிந்திருக்கும் மண்புழு உரத்தை சேகரிக்க வேண்டும். இந்த உரத்தை 24 முதல் 36 மணிநேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். இது காய்ந்த பின் சல்லடையில் சலித்து எடுத்தால் மிகவும் தரமுள்ள மண்புழு உரம் கிடைக்கும். மண்புழு உரமானது அடர்ந்த டீத்தூளின் நிநத்தில் இருக்க வேண்டும். இந்த உரத்திலிருந்து கெட்ட துர்நாற்றம் எதுவும் வரக்கூடாது. இவ்வாறு கிடைக்கும் மண்புழு உரத்தை சாக்குப் பைகளில் சேமிப்பதை விட திறந்த வெளி நிழலில் சேமிப்பது நல்லது. திறந்த வெளியில் சேமிக்கும் போது லேசாக இதன் மீது நீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் மண்புழு முட்டைகளையும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் இந்த உரத்தில் அப்படியே இருந்து பயிர்களுக்கு நன்மை செய்யும்.
இந்த முறையில் ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தை தயார் செய்து கொள்ள முடியும்

கரும்பு சாகுபடியில் நவீனம் – வம்பன் செய்தி

வேளாண்மையில் அதிக விளைச்சலைப் பெறவும், லாபத்தை ஈட்டவும், புதிய தொழில்நுட்பம் அவசியமாகிறது. அதன்படி, கரும்பு சாகுபடியில், நடவில் தொடங்கி அறுவடை வரை பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • கரும்பு சாகுபடியில்
  • விதைக்கரும்பு,
  • பார் அமைத்தல்,
  • களை நீக்குதல்,
  • மண் அணைத்தல்,
  • தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும்
  • அறுவடை
போன்றவற்றால் விவசாயிகளுக்கு அதிகம் செலவானது. இலாபமும் பெருமளவில் குறைந்தது.
இந்நிலையில், கரும்பு சாகுபடியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, சாகுபடி மேற்கொண்டால் லாபம் இரட்டிப்பாகிறது.
karumbu
karumbu
அதாவது, ஐந்தரை அடி இடைவெளியில் டிராக்டர் மூலம் பார் அமைக்க வேண்டும். பின்னர், லேசாக வாய்க்கால் போன்று அமைத்து, அதில் சொட்டு நீர் பாசனத்துக்கான குழாய்களை பதித்து, மண்ணை மூடிவிட வேண்டும்.
நடவு தினத்தன்று சொட்டு நீர் மூலம் லேசாக தண்ணீர் பாய்ச்சி, அந்த ஈரப்பதத்தில் ஒற்றை நாற்றை நடவு செய்ய வேண்டும். பின்னர், தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மண் அணைக்கவும், களை நீக்கவும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் கரையக்கூடிய வகையிலான உரத்தை கரைத்து, அதை சொட்டு நீர்ப் பாசனக் குழாய் மூலம் பயிருக்கு அளிக்க வேண்டும். இப்படி உரத்தைப் பயன்படுத்தினால் உரம் வீணாகாது. தொழிலாளர் பற்றாக்குறையினால் சில சமயங்களில் அறுவடையில் தேக்கம் ஏற்படும். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கரும்பு ஆலைகள் மூலம் இரண்டு விதமான அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை தோட்டத்தின் அளவைப் பொருத்து மாறுபடும். தற்போது ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மூலம் தமிழகத்தில் 5 ஆலைகளில் 12 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது இயந்திரம் மூலம் கரும்பை அறுவடை செய்து, ஆலைக்கு கொண்டு செல்லும் வாகனத்தில் ஏற்ற டன்னுக்கு ரூ. 360 வசூலிக்கப்படுகிறது.
இந்த இயந்திரம் நாளொன்றுக்கு 250 டன் அறுவடை செய்கிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 750 பேர் மேற்கொள்ளும் பணியை ஓர் இயந்திரம் செய்கிறது.
இவ்வாறு இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் மறுமுறை வளரும் பயிர் சீராகவும், வீரியம் மிக்கதாகவும் வளர்கிறது. மேலும், தோகைகள் துண்டாக்கப்பட்டு தோட்டத்திலேயே கொட்டப்படுவதால் கூடுதலாக இயற்கை உரம் கிடைக்கிறது.
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க ஏக்கருக்கு 6,000 ரூபாய் சர்க்கரை ஆலையிலிருந்தும், குறு விவசாயியாக இருந்தால் அரசு முழு மானியமும் அளிக்கிறது என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு 99766 19198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கரும்பு நாற்று தேவைக்கு 97865 06343 என்ற எண்ணில் முன்னோடி விவசாயியான வடகாடு தேவதாûஸயும் தொடர்பு கொள்ளலாம்

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறை – TNAU


ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நெல்:

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இலைச் சுருட்டுப் புழுவிற்கு விளக்குப் பொறியும் வேப்பங்கொட்டைச் சாறும்:

இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெல் குலை நோய்க்கான முன்னறிவிப்பு:

தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

நிலக்கடலை:

இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003. தொலைபேசி: 0422-6611214.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003. தொலைபேசி: 0422-6611226

அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

நிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை:
  • மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.
  • அமிர்த கரைசல் தயார்.
பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
  • அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
(தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Saturday 21 January 2012

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
ஆட்டு எரு
ஆட்டு எரு Image courtesy http://fr.bestpicturesof.com/manure
அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்

Friday 20 January 2012

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

 

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறுமணமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. சமையலில் சேர்த்து சாப்பிடும்போது நாம் மிகவும் உதாசீனமாக தூக்கி எறிந்துவிடுகிறோம். கறிவேப்பிலையை சமையலில் சிதைக்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணசக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப்பிலைøயில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களைக் கொண்டது.
சிறு வயதில் ஏற்படும் இளநரையை மாற்ற கறிவேப்பிலையை சமைக்காமல் சாப்பிடலாம். பார்வைக் கோளாறுகள் நீக்கி கண்கள் பிரகாசமாகும். முக வசீகரம் தரக்கூடிய தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடியது. முடி உதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 21 நாட்கள் காலை மாலை இருவேளை சாப்பிட நீரிழிவு குறையும். மூல நோய், வெண்குஷ்டம், தோல் வியாதிகள் நீங்க கறிவேப்பிலை ஒரு முத்தான சஞ்சீவிக் கீரையாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலியைப் போக்கும் உன்னதமான
கீரையாகும்.
தயாரிக்கும் முறை: ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து சுத்தமாக கழுவி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு அல்லது பேரீட்சை ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காபி, டீக்கு பதிலாக அருந்த மிகவும் ஏற்ற பானம்.
சர்க்கரையை நாம் சேர்த்துக் கொள்வதால் நமது உடலிலுள்ள வைட்டமின் சத்துக்களை அது உறிஞ்சிவிடுகிறது. அதனை ஈடுசெய்ய மேற்கூறிய கறிவேப்பிலை நீர் சாப்பிடலாம். நமது அழகான முடியையும் கண்களையும் பேணிக்காக்கும் அற்புதமான கீரை கறிவேப்பிலையே.
தொடர்புக்கு: பி.வி.கனகராஜன், உடுமலைப்பேட்டை. 96594 56279

மா சாகுபடியில் சில முக்கிய தொழில்நுட்பங்கள்





  
அடர் முறை நடவு: பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மா சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், பேரம்பட்டு கிராமத்தில் சுமார் 5 ஏக்கரில் ஆல்போன்சா ரக மரங் களை நட்டு விவசாயம் செய்து வருகிறார். தனது மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வளமான செம்மண் உள்ளது. இந்த மண்ணின் ஆழம் சுமார் 6 அடியாகும். விவசாயி மரங்களை "அடர்வு' முறையில் நட்டுள்ளார். இவரது 5 ஏக்கர்கள் பரப்பில் 15 து 15 என்ற இடைவெளியில் ஆல்போன்சா ஒட்டு மாஞ்செடிகள் மொத்தம் 950 நட்டுள்ளார்.

மாவில் ஊடுபயிர்கள்: இவரது ஊர் பக்கம் மானாவாரி நிலங்களில் அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். விவசாயி மேற்கண்ட பயிர்களை தனது மாந்தோட்டத்தில் ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளார்.அவரை மற்றும் துவரை பயிர் செய்யும் காலம் ஜூன் முதல் ஜூலை 15 முடிய. உளுந்து, பாசிப்பயறு, காராமணி பயிர்செய்யும் காலம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் முடிய.
சாகுபடி செய்த பயிர்களில் துவரை 6 மாதம் முதல் 7 மாதம் உள்ள காலத்தில் காய்கள் அனைத்தும் முதிர்ச்சி அடைந்து வருகின்றன. இவைகளின் மகசூலினை எடுக்கிறார். அடுத்து துவரையில் 6 மாதம் கழித்து மகசூல் எடுக்கிறார். உளுந்து, பாசிப்பயறு, காராமணி இவைகள் 90ம் நாள் முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வருகின்றன. இவைகள் சாகுபடியில் விவசாயிக்கு கணிசமான லாபம் கொடுக்கின்றன. துவரையில் ரூ.13,000. அவரையில் ரூ.8,000. இதர பயிர்களில் ரூ.8,000 லாபம் எடுக்கிறார். இவரது சாகுபடியை பல விவசாயிகள் பார்த்து ஊடுபயிர் சாகுபடியில் இவ்வளவு லாபமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். இவர் மாமரங்களுக்கு ஜூன் மாதம் கவாத்து செய்து முடித்தவுடன் மரம் ஒன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, டிஏபி 1 கிலோ, யூரியா 1 கிலோ, பொட்டாஷ் அரை கிலோ, வேப்பம் பிண்ணாக்கு ஒரு கிலோ இடுகிறார். விவசாயி செய்துவரும் கட்டுக் கோப்பு சாகுபடி முறைகள் அவர் தோட்டத்தில்உள்ள மாமரங்களுக்கு 3 வருடம் முடிந்தவுடனேயே பலர்
ஆச்சரியப்படும்படி காய்ப்பிற்கு கொண்டுவந்துவிட்டன. இந்த மரங்களில் காய்த்துள்ள காய்களின் எடை 300 அல்லது 350 கிராமாக உள்ளன. இந்த காய்களுக்கு கிலோவிற்கு விலை ரூ.35லிருந்து ரூ.40 வரை கிடைக்கின்றது. விவசாயி மரங்களை நெருக்கமாக நட்டுள்ளதால் மரங்கள் பூதாகரமாக வளராமல் அழகிய சிறிய மரங்களாகவே வளர்ந்துள்ளன. மரங்கள் சிறியதாக வளர்ந்துள்ளதால் விவசாயி நன்மைகள் பெற்றுள்ளார். சிறிய மரங்களில் கவாத்து செய்வது சுலபமாக உள்ளது. செலவு குறைவு. சிறிய மரங்களுக்கு பயிர் பாதுகாப்பு, நீர் பாசனம் போன்ற பணிகளுக்கு செலவு குறைவு. சிறிய மரங்களில் காய்களை அடிபடாமல் பறிப்பது சுலபம். அறுவடை செலவு குறைவு. இவரது தோட்டத்தை பல விவசாயிகள் நேரில் வந்து பார்க்கின்றனர். விவசாயி தண்டபாணி தான் அனுசரித்துவரும் சாகுபடி முறைகளை விவசாயிகளுக்கு பொறுமையாக விளக்கி வருகிறார்.